தமிழ்நாடு

tamil nadu

2019ல் விட்டதை 2023ல் பிடித்த அஜித் பவார்... யார் இந்த அஜித் பவார்? மராட்டிய அரசியலின் திருப்புமுனை கதை

By

Published : Jul 2, 2023, 4:24 PM IST

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக - சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவார் இணைந்து உள்ளார். அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ள நிலையில், இந்த திடீர் திருப்பம் திட்டமிட்டு நடந்ததா.. அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

Ajit Pawar
Ajit Pawar

மும்பை : மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், 30 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சிவசேனா - பாஜக கூட்டணியில் இணைந்து உள்ளார். இந்நிலையில், அஜித் பவாருக்கு மகாராஷ்டிர துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு இதே போல் பாஜகவுக்கு ஆதரவு அளித்த அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், அஜித் பவாரின் முடிவுக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இசைவு கொடுக்காத நிலையில், 100 மணி நேரம் கூட அஜித் பவாரால் துணை முதலமைச்சராக பதவி வகிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது . மகாராஷ்டிர சட்டசபையில் மொத்தம் உள்ள 288 இடங்களில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. எதிர் தரப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 தொகுதிகலும் வெற்றி பெற்றது.

அடுத்த முதலமைச்சர் யார், அமைச்சர் பதவி பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக பாஜக - சிவசேனா இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது. இதனிடையே, ஆட்சியைக் கைப்பற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தையில் சிவசேனா ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மகாராஷ்டிர முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிசும், துணை முதலமைச்சராக அஜித் பவாரும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. மேலும், பாஜகவை ஆதரிப்பது என்பது அஜித் பவாரின் தனிப்பட்ட கருத்து என்றும்; அதற்கு ஒரு போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒத்துழைப்பு வழங்காது என்றும் சரத் பவார் தெரிவித்தார்.

மேலும், புதிய அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் - அஜித் பவார் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி மராட்டியத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் மராட்டிய முதலமைச்சராக உத்தவ் தாக்ரே இருந்த நிலையில், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் திரண்டு பாஜகவில் இணைந்தனர். இதனால் மராட்டிய அரசு கவிழ்ந்தது. மேலும் மராட்டிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிசும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவாருக்கு அடுத்தபடியாக, அஜித் பவார் தான் என்று இருந்த நிலை, சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவின் வருகைக்கு பின் மெல்ல மெல்ல காணாமல் போகத் தொடங்கியது. எம்.பி.யான சுப்ரியா சுலே தேசிய அரசியலை கவனித்துக்கொண்டு இருந்த நிலையில், மாநில அரசியலை கண்காணிக்க பேரனை சரத் பவார் எம்.எல்.ஏ.வாக களமிறக்கிவிட்டார்.

இது அஜித் பவாருக்கு கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தொடர் அதிருப்தியில் இருந்த அஜித் பவார் அண்மையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைய உள்ளதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து அஜித் பவாரை சரிகட்ட கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக சரத் பவார் அறிவித்தார்.

சரத் பவாரின் முடிவுக்கு நாலாபுறம் இருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், அவர் அந்த முடிவை கைவிட்டார். மேலும், அஜித் பவாரும் சமாதானம் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக 30 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து அஜித் பவார் பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்து உள்ளார்.

மேலும், மராட்டிய துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் அனில் பாட்டீல், சகன் புஜ்பால், அதிதி தட்கரே உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

2019ஆம் ஆண்டு கட்சித் தாவலில் தோல்வியைக் கண்ட அஜித் பவார் ஏறத்தாழ 4 ஆண்டுகள் இடைவெளியில், மராட்டிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளார். அஜித் பவாரின் இந்த திடீர் முடிவு மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :Ajit Pawar : மகாராஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்பு! இரண்டு துண்டான தேசியவாத காங்கிரஸ்!

ABOUT THE AUTHOR

...view details