அமராவதி(ஆந்திரா):விஜயவாடா அருகே பயகாபுரத்தில் கடந்த 2021, நவம்பரில் கட்டட ஒப்பந்தகாரர் பீதலா அப்பலராஜு என்பவர் சந்தேகமான முறையில் தலை, முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் விசாகப்பட்டினத்தில் வசித்த நிலையில், தொழில் நிமித்தமாக சென்ற இடத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள், மொபைல் சிக்னல் ஆகியவற்றை ஆய்வு செய்தும் எந்த துப்பும் கிடைக்காமலிருந்த நிலையில், உயிரிழந்தவரின் உடலின் சில பாகங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், உயிரிழந்தவரின் கீழ் வீட்டில் வசித்த சூப்பர்வைசர் சசிகுமார் என்பவரின் குடும்பத்தினரிடையே போலீசார் 10 நாட்கள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து அவர்கள், தங்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து விசாரணைக்கு அழைப்பதை போலீசார் நிறுத்தினர். இதனிடையே தடயவியல் அறிக்கையில், விஷப் பரிசோதனையால் மரணம் ஏற்பட்டதாகத் தகவல் வந்ததை அடுத்தும், இவ்வழக்கில் சரியான துப்பு கிடைக்காததால், விசாரணையை போலீஸார் ஒதுக்கி வைத்தனர்.