தமிழ்நாடு

tamil nadu

2 நாய்களை லண்டன் போலீஸார் சுட்ட சம்பவம்: கண்ணீர் விட்ட நடிகை வேதிகா!

By

Published : May 21, 2023, 9:21 AM IST

Updated : May 21, 2023, 10:02 AM IST

லண்டனில் மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ் என்ற 2 நாய்களை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவத்தில், நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை வேதிகா கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

actress Vedhika
நடிகை வேதிகா

லண்டன்: லூயி டர்ன்புல் என்ற நபர் லண்டனில் இரண்டு நாய்கள் வளர்த்து வருகிறார். அந்த நாய்களின் பெயர் மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ் (Marshall and Millions). இந்த இரு நாய்களும் ஒரு பெண்ணை தாக்கியுள்ளதாக போலீசாருக்குத் தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த 7ஆம் தேதி அந்த இரு நாய்களையும் அதன் உரிமையாளரையும் போலீசார் துரத்திப் பிடிக்கின்றனர்.

அப்படி ஒரு இடத்தில் பிடிக்கும்போது, அந்த நாய்களின் உரிமையாளரிடம் போலீசார் கேள்வி கேட்கத் தொடங்குகின்றனர். உடனே அவரது இரு நாய்களும் போலீஸை நோக்கி குரைக்கத் தொடங்கியுள்ளது. அப்போது கையில் துப்பாக்கி வைத்திருந்த போலீசார் அந்த இரு நாய்களையும் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. பின்பு அந்த உரிமையாளரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. தற்போது அந்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில் அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 7 போலீஸையும் வேலையை விட்டு தூக்கச் சொல்லியும், மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ் நாய்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து நடிகை வேதிகா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இச்சம்பவம் குறித்து வேதிகா பேசியதாவது, "ஒரு நாய் மற்றொரு நாயைப் பார்த்தால் குரைக்கும். இது இயற்கை. அதைத்தான் மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ் ஒரு பெண் உரிமையாளரின் நாயைப் பார்த்து குரைத்துள்ளது. அதை யாரோ போலீசிடம் சொல்லியுள்ளனர். இதனால் 7 முதல் 9 பேர் கொண்ட போலீசார் மார்ஷல் மற்றும் மில்லியன்ஸை துரத்திப் பிடிக்கின்றனர். போலீசார் சுற்றி வளைத்தவுடன் அந்த நாய்கள் குழம்பிப் போய் ஏன் இவர்கள் கையில் துப்பாக்கியுடன் நம்மை துரத்துகிறார்கள் எனக் குரைத்திருக்கிறது.

அந்த நாய்கள் ஒரு மன அழுத்தமான சூழலில் இருந்துள்ளன. அப்போது மார்ஷல் என்ற நாயைத் தலையில் சுட்டுள்ளனர், போலீசார். அதைப் பார்த்த மற்றொரு நாய் பயத்திலும், உடனிருந்த நாய்க்கு ஏதோ ஆகிவிட்டது என வேகமாக குரைக்கிறது. அது குரைப்பதை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. பின்பு தப்பிப்பதற்காக ஓடுகிறது. அப்போது அந்த நாயையும் சுட்டுக்கொன்று விடுகிறார்கள். தற்போது அந்த வீடியோவை பார்த்து தான் நானும் பேசுகிறேன். நான் எதையும் கதையாக கூறவில்லை. 7 போலீசார் சுற்றி நிற்கும் போது அந்த நாய்களுக்கு என்ன புரியும். அவைகளுக்கு என்ன தெரியும்.

எப்படி போலீசார் நாய்களைச் சுடலாம். குறிப்பாக அந்த நாய்களின் உரிமையாளர் வீடில்லாதோர். வீடில்லாதோர் என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என போலீஸ் நினைத்துவிட்டார்களா. நான் அந்த போலீசிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். இது போன்ற சூழ்நிலையில் அங்குள்ள ஒரு போலீசுக்கு கூடவா பொறுமையாக இருக்க வேண்டும் எனத் தோன்றவில்லை.

அந்த நாய்கள் பயந்து போய் இருக்கின்றன. அது ஏன் அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் சுட்டுக் கொன்றதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இது என்ன உலகம். எந்த ஒரு காரணமுமின்றி இரு அப்பாவி நாய்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டது. அதிகாரத்தை ஒருபோதும் தவறாக பயன்படுத்தக்கூடாது. இந்தச் சம்பவம் ஒரு கொடூரமான, வன்முறை வெறியாட்டம்" எனக் கவலையுடன் கண்ணீர் மல்க அழுதபடி பேசியுள்ளார். மேலும் அந்த போலீசாருக்கு எதிராகப் புகார் அளிக்கும் லிங்க்கையும் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: Today Horoscope: கன்னி ராசிக்கு சோதனை நிறைந்த நாள்: உங்க ராசிக்கு என்ன?

Last Updated : May 21, 2023, 10:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details