தமிழ்நாடு

tamil nadu

காசியாபாத் துயரம்: ரூ.55 கோடியில் கட்டப்பட்ட தகன மேடை இடிந்து விழுந்த விவகாரத்தில் மூவர் கைது!

By

Published : Jan 4, 2021, 7:19 PM IST

லக்னோ : காசியாபாத் தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்து 25 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பொதுப்பணித் துறை அலுவலர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காசியாபாத் துயரம் : தகன மேடை இடிந்து விழுந்த விவகாரத்தில் மூன்று அலுவலர்கள் கைது!
காசியாபாத் துயரம் : தகன மேடை இடிந்து விழுந்த விவகாரத்தில் மூன்று அலுவலர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியில் வசித்துவந்த பழக்கடை வியாபாரி ராம்தான் என்பவர் நேற்று (ஜன. 03) உயிரிழந்தார். இதையடுத்து, ராம்தானின் உறவினர்கள் அவரது உடலைத் தகனம் செய்வதற்காக முராத் நகரில் உள்ள சுடுகாட்டு தகன மேடைக்கு கொண்டுசென்றனர்.

ராம்தானின் உடல் தகனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மழை பெய்துள்ளது. இதையடுத்து, இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அனைவரும் தகன மேடை அமைந்துள்ள பகுதியில் மழையின் காரணமாக ஒதுங்கி நின்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக தகன மேடையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த ராம்தானின் இறுதி நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 25 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல் துறையினரும், தீயணைப்புப் படையினரும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்விபத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 38 பேர் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும், சிலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் தொடர்ந்து அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

காசியாபாத் துயரம்: ரூ.55 கோடியில் கட்டப்பட்ட தகன மேடை இடிந்து விழுந்த விவகாரத்தில் மூன்று அலுவலர்கள் கைது!

இதனிடையே, 25 பேரின் உயிரைப் பறித்த தகன மேடை இடிந்து விழுந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்கள், டெல்லி - மீரட் தேசிய நெடுஞ்சாலையில் கிடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விரைந்த அம்மாவட்ட அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இறந்தவர்களின் உடல்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.

வலுத்துவரும் போராட்டத்தின் எதிரொலியாக, காசியாபாத் தகன மேடை கட்டுமானத்தோடு தொடர்புடைய முராத்நகர் நகர பாலிகா நிர்வாக அலுவலர் நிஹாரிகா சிங், பொறியியலாளர் சந்திர பால், மேற்பார்வையாளர் ஆஷிஷ் ஆகிய மூன்று பொதுப்பணித் துறை அலுவலர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தகன மேடையை கட்டிய ஒப்பந்தக்காரர் அஜய் தியாகி தலைமறைவாகி உள்ளார். அவரைக் கைதுசெய்ய காவல் துறையினர் தனிப்படை அமைத்து, தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

ஏறத்தாழ 55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த காசியாபாத் தகன மேடை சுமார் 15 நாள்களுக்கு முன்புதான் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :இலங்கை செல்லும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

ABOUT THE AUTHOR

...view details