தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாய சங்கத்தலைவரின் மீது வீசப்பட்ட கறுப்பு மை; 3 பேர் கைது - கர்நாடகாவில் பரபரப்பு

விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகாயித் மீது இன்று (மே30) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கறுப்பு நிற மையை முகத்தில் ஊற்றியதோடு 'மோடி மோடி' என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

By

Published : May 30, 2022, 5:51 PM IST

ராகேஷ் திகாயித்
ராகேஷ் திகாயித்

கர்நாடகா (பெங்களூரு):விவசாய சங்கத்தலைவரும் BKU செய்தித் தொடர்பாளருமான ராகேஷ் திகாயித், இன்று (மே 30) பெங்களூரு காந்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, 3 பேர் கொண்ட கும்பல் ஊடகங்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த விவசாயி தலைவர் ராகேஷ் டிகாயித்தின் மீது திடீரென தகராறில் ஈடுபட்டு, அவரது முகத்தில் கறுப்பு நிற மை ஊற்றப்பட்டது. அவர்களில் ஒருவர் 'மோடி, மோடி' என்று முழக்கம் எழுப்பியதை அடுத்து அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். பின்னர், அங்கிருந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் தப்பியோட முயன்றவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனால், அவரது தலைப்பாகை, முகம், குர்தா மற்றும் கழுத்தில் பச்சை சால்வை ஆகியவற்றில் கறுப்பு மை பரவியது.

தனியார் சேனல் ஒன்றில் சமீபத்தில் ஒளிபரப்பிய 'ஸ்டிங் ஆபரேஷன்'-இல் மற்றொரு விவசாயி தலைவரான கொடிஹள்ளி சந்திரசேகர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு தீர்வு காண டெல்லியில் 13 மாதங்களாக நீடித்து வந்த விவசாயிகள் இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர, பணத்தை வாங்கிக் கொண்டு மத்திய அரசுடன் கூட்டுச் சேர்ந்து, ராகேஷ் திகாயித் முயற்சிப்பதாக சந்திரசேகர் கூறியதாகக் கூறப்படுகிறது. போலீசார் 3 பேரையும் கைது செய்து ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

கறுப்பு மை வீசப்பட்ட விவகாரத்தில் "இது பாஜகவின் சதி. நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னதாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பினும் அரசாங்கம் பாதுகாப்பு வழங்கத்தவறியது" என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து திகாயித், செய்தியாளர்களிடம் பேசுகையில், பத்திரிகையாளர் சந்திப்பில் தனக்கு நேர்ந்த இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், “கர்நாடகாவில் உடல் ரீதியான தாக்குதலை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஸ்டிங் ஆபரேஷன் செய்த மீடியா சேனல் ஒன்று டிஆர்பியை அதிகரிக்கும் நோக்கில் ஆத்திரமூட்டும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒருவர் மேடைக்கு ஏறி வந்து மைக்கை கொண்டு தாக்கமுயற்சித்தார். அடிகளைத் தடுக்க என் கை தவறினால் எனக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கும். என் கைகள் வீங்கிவிட்டன," என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் கர்நாடக மாநில அரசாங்கத்தின் தோல்வி என்று கூறினார். "அறையில் உளவுத்துறையினர் இருந்தபோதும் எப்படி இது நடந்தது? இது நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். இந்த சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தி, சம்பவத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு காவல் துறையை நான் கோருகிறேன்," என்று அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மற்றொரு விவசாயி தலைவர் யுத்தவீர் சிங், தாக்குதல் நடத்தியவர்கள் பிரதமர் மோடியின் சுவரொட்டியை ஏந்தி, "மோடி மோடி" என்று கூச்சலிட்டதால், நியாயமான விசாரணையை நடத்துவது ஆளும் ஆட்சியின் கையில் உள்ளது என்றார். இதனிடையே மாநிலம் முழுவதும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என மாநில விவசாயி தலைவர் சுக்கி நஞ்சுண்டசாமி அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், சந்திரசேகர் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் திகாயித் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும்,"என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; எந்த ஆதாரமும் இல்லாதவை. விவசாயிகள் இயக்கம் ஒரு வரலாற்று இயக்கம். இது மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை கட்டாயப்படுத்தியது. ஆம், நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். ஆனால், எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டுவரவில்லை" என்று அவர் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு காரணமான ‘கர்நாடக ரக்ஷனா வேதிகே’ அமைப்பைச் சேர்ந்த பாரத் ஷெட்டி, பிரதாப் மற்றும் சிவக்குமார் ஆகிய மூன்று பேரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர்.

விவசாய சங்கத் தலைவர் முகத்தில் மை ஊற்றியதால் பரபரப்பு

இதையும் படிங்க: 'சாதி, மதத்தைச் சாராதவர்' என மகளுக்கு சான்றிதழ் வாங்கிய தம்பதிக்கு குவியும் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details