தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 2:20 PM IST

ETV Bharat / bharat

ஒடிசாவில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழப்பு!

ஒடிசா மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனிடையே மாநிலத்தின் 6 மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

odisha-cyclonic-circulation-causes-heavy-rains
ஒடிசாவில்மின்னல் தாக்கி 1 0 பேர் உயிரிழப்பு

பாலசோர் :ஒடிசாவில் இடி மற்றும் மின்னல் தாக்கி 10க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். குர்தா, போலாங்கிர், அங்குல், பவுத், ஜகத்சிங்பூர், தென்கனல் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல் தாக்கில் 10 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

இதனால் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடாது பலத்த மழை கொட்டி வருகிறது. ஒடிசாவின் இரட்டை நகரங்களான புவனேஸ்வர் மற்றும் கட்டாக் உள்பட கடலோரப் பகுதியில் மின்னல் தாக்குதலுடன் கனமழை பெய்து வருகிறது.

நேற்று (செப். 2) மதியம் 90 நிமிட இடைவெளியில் முறையே 126 மில்லி மீட்டர் மற்றும் 95 புள்ளி 8 மில்லி மீட்டர் அளவில் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்ததில் மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இதில், குர்தா மாவட்டத்தில் 4 பேரும், போலங்கிரில் 2 பேரும், அங்குல், பௌத், ஜகத்சிங்பூர் மற்றும் தென்கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்ததாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் இதைத் தவிர, குர்தாவில் 3 பேர் மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மீட்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இது குறித்து ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது அதிகாரப்பூர்வ x (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "வங்காள விரிகுடாவின் வடக்கே மற்றொரு புயல் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு" தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:Gyanvapi Mosque survey: ஞானவாபி மசூதி ஆய்வு; கூடுதல் அவகாசம் கோரும் இந்தியத் தொல்லியல் துறை.!

ABOUT THE AUTHOR

...view details