தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வத்தலக்குண்டில் பட்டப்பகலில் வங்கியில் கொள்ளை முயற்சி.. விரட்டிப் பிடிக்கப்பட்ட இளைஞரின் பகீர் பின்னணி! - Bank Robbery Attempt - BANK ROBBERY ATTEMPT

Bank Robbery Attempt: பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு, வங்கியை கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடித்த சம்பவம் வத்தலக்குண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bank Robbery Attempt
வங்கி கொள்ளை முயற்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 3:09 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் தங்க நகைக்கடன் வங்கியில், வழக்கம் போல் இன்று (திங்கட்கிழமை) ஊழியர்கள் வங்கி செயல்பாட்டிற்காக வந்துள்ளனர். இதையடுத்து, ஊழியர்கள் வங்கியைத் திறக்க முற்பட்டபோது, திடீரென வங்கியின் மேல் மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் இறங்கி வந்துள்ளார்.

மேலும், அவர் கையில் வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு, அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரின் கழுத்தில் வைத்து, 'நான் சொல்வதை அனைவரும் கேட்காவிட்டால், கொலை செய்து விடுவேன்' என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தான் கொண்டு வந்திருந்த வயர் மூலம், ஒரு ஊழியரைக் கொண்டு மற்ற ஊழியர்களின் கைகளை அந்த இளைஞர் கட்ட வைத்துள்ளார்.

தொடர்ந்து, ஊழியர்களிடம் இருந்து வங்கி சாவியைப் பெற்ற அந்த இளைஞர், வங்கியின் கதவைத் திறக்க முற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது சாவியை மாற்றிப் போட்டதால், வங்கி அலாரம் அடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர், அங்கிருந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட வங்கி ஊழியர்கள், கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே இளைஞரைப் பிடிக்க விரட்டியுள்ளனர். இந்நிலையில், கையில் கட்டுடன் ஊழியர்கள் ஒரு இளைஞரை விரட்டுவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், தப்பியோடிய அந்த இளைஞரை மடக்கிப் பிடித்துள்ளனர். இதையடுத்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்ததில், அதில் கொள்ளை அடிக்கத் தேவையான ஆயுதங்கள் அனைத்தும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த வத்தலக்குண்டு போலீசார், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோட முயன்ற இளைஞரை, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், இரவே கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்ததும், அந்த முயற்சி பயனளிக்காத காரணத்தால், ஊழியர்கள் வரும் வரை காத்திருந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முயன்றதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பெரும் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால், வங்கியில் இருந்த சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் தப்பியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு; சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்! - Sattai Duraimurugan

ABOUT THE AUTHOR

...view details