திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தமிழக காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் செந்தமிழ் அரசுவின் மகள் கனிமொழி-விவேக் விக்னேஸ்வரன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (ஜன.31) நடைபெற்றது. இதில் பங்கேற்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் எங்கே இந்தியாவின் பொருளாதார வளர்ந்துள்ளது என்று சொல்லுங்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவேன் எனக் கூறிய பாஜக அரசு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்ததா? விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக மாற்றுகிறேன் என்று சொன்னார்கள் அதைச் செய்தார்களா? பண மதிப்பு இழப்பீடு கொண்டு வந்து ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பதினைந்து லட்ச ரூபாய் தருவேன் என்று சொன்னார்கள் அதைச் செய்தார்களா?
கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வந்தார்களா? பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த 10 ஆண்டுகளில் புதிய தொழிற்சாலைகள் இந்தியாவில் வந்து உள்ளதா? எந்த வகையில் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதாகப் பாரத பிரதமர் மோடியோ, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோ அல்லது குடியரசுத்தலைவர் தனது உரையில் சொல்ல முடிந்ததா?
இந்தியாவின் பொருளாதாரம் பாஜக ஆட்சியில் வளர்ந்துள்ளது என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 15 கோடி குடும்பங்களை வறுமையிலிருந்து வெளியே கொண்டு வந்தார்.
இதனைப் பாராட்டி ஐநா சபை மன்மோகன் சிங் அரசுக்குச் சான்றிதழை அளித்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பண வீக்கத்தைக் குறைத்தது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பணவீக்கம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வைச் சந்தித்தது.
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், உலகில் உள்ள நாடுகளில் இந்தியா தான் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்று வருகிறது. இதைப் பத்திரிகையாளர்கள் தமிழக பாஜக மாநில தலைவரிடம் கேட்டிருக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதால், தான் அவர்கள் ராமர் கோயிலைப் பற்றிப் பேசி வருகிறார்கள்.