திருச்சி: பஞ்சப்பூர் பேருந்து முனைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கே என் நேரு உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இங்கு மாநகர பேருந்துகள் நிறுத்துமிடம், தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம், லாரிகள் முனையம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், அஞ்சல் நிலையம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 115.68 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக திட்ட மதிப்பீடு ரூ.900 கோடி என கூறப்படுகிறது. அதில் அரசு முதல்கட்டமாக ரூ.460 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளை ரூ.349.98 கோடி மதிப்பில் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 டிச.30ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2022 ஜூன் 13 ஆம் தேதி நிர்வாக அனுமதி வழங்கியது. இந்த பேருந்து முனைய பணிகள் தற்போது 93 சதவீதம் முடிந்துள்ளன. இருப்பினும் இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வரும் போது தினமும் 2 லட்சம் பயணிகளை கையாளும் அளவிற்கு மிக தரமானதாகவும், பெரிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.