சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவு செய்யாமல் உதவி மருத்துவர்கள் பணிக்கு விண்ணப்பித்த 400 மருத்துவர்களின் பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,642 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு, மருத்துவ தேர்வு வாரியம் மூலம், கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து 2,642 மருத்துவர்களின் தேர்ச்சி பட்டியலை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டது.
இந்த பட்டியலில் 2024 ஜூலை 15 ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யவில்லை எனக்கூறி, 400 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதை எதிர்த்து மருத்துவர் சாய் கணேஷ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுக்களில், ”2024 ஜூலை 15 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்தும், தங்களது விண்ணப்பம் பதிவு செய்யப்படாத நிலையில், தற்காலிக பதிவுச் சான்றிதழை வைத்து அரசு உதவி மருத்துவர் தேர்வுக்கு விண்ணப்பித்ததாக" குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மருத்துவப் பல்கலைக்கழகம் சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் செய்ததால், நிரந்தரப் பதிவு சான்றிதழ் பெற முடியதாதற்கு பல்கலைக்கழகமே காரணம் என்பதால், தங்களுக்கும் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், இறுதிப் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 'அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும்' - நீதிமன்றம் நம்பிக்கை!
இது தொடர்பான வழக்குகள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணை நேற்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்தவர் தேர்வு வாரியம் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், குறிப்பிட்ட கட் ஆப் தேதிக்குள் மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு பெற்றவர்கள் மட்டுமே பணி நியமனத்திற்கு தகுதியானவர்கள் என்றும், உரிய விதிகளுக்கு உட்பட்டு தான் பணி நியமன நடைபெற்றுள்ளதால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.