நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதில் இரவு காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது சோலூர் மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது சோலூர் மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிவையில், அவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர். தொடக்கத்தில் இந்த வழக்கை சோலூர் மட்டம் போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அப்போது தனிப்படை போலீசார் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, கொடநாடு கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தற்கொலை வழக்கு, சேலம் அருகே கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகளை தனித்தனியாக விசாரித்தனர். அதில் கொலை, கொள்ளை சம்பவத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர்களையும் தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையானது ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.