வாஷிங்டன்:2025ஆம் ஆண்டு சர்வதேச அளவில் சீரான பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும் இந்திய பொருளாதாரம் சிறிதே பலவீனமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார். அமெரிக்காவின் வர்த்தக கொள்கையை சுற்றி இந்த ஆண்டு பெரும் அளவுக்கு நிச்சயமற்ற தன்மை நிலவலாம் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன்னில் வெள்ளிக்கிழமை அன்று ஆண்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிறிஸ்டலினா ஜார்ஜீவா,"2025ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் சிறிதளவு பலவீனமாக இருக்கும். அதே நேரத்தில் முன்பு எதிர்பார்த்ததை விடவும் அமெரிக்காவில் நல்ல சூழல் நிலவும். ஐரோப்பிய யூனியனில் தடுமாற்றம் இருக்கும். பிரேசில் அதிக பணவீக்கத்தை எதிர்கொள்ளும்
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் உள்நாட்டு தேவையில் பணவாட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான சவால்கள் இருப்பதை ஐஎம்எஃப் கண்டது. குறைந்த வருவாய் நாடுகள் அனைத்து முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், எந்தவொரு புதிய அதிர்ச்சியும் அவைகளை மிகவும் எதிர்மறையாக பாதிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றன.
2025ஆம் ஆண்டைப் பொறுத்துவரை நாம் என்ன எதிர்பார்க்கின்றோம் என்றால், குறிப்பாக பொருளாதார கொள்கை விதிகளை பொறுத்தவரை பெரும் அளவுக்கு நிச்சயமற்ற தன்மை இருக்கும். அமெரிக்க பொருளாதாரத்தின் பங்கு மற்றும் அளவை கொடுக்கும்போது, குறிப்பாக கட்டணங்கள், வரிகள்,கட்டுப்பாடுகள் தளர்த்துதல் மற்றும் அரசாங்க செயல்திறன் என்பது வரவிருக்கும் புதிய நிர்வாகம் கொள்கை முன்னெடுப்புகளில் சர்வதேச அளவில் ஆர்வம் இருக்கும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.